×

திமுகவுக்கு சாதகமான நிலை எடுத்துள்ள ஓபிஎஸ்சின் முடிவால் எடப்பாடி, பாஜ, டிடிவி அப்செட்: சொந்த காசில் சூனியம் வைத்துவிட்டோமோ என்று புலம்பல்

 

திமுகவுக்கு சாதகமாக முடிவு எடுத்துள்ள ஓபிஎஸ்சின் முடிவால் எடப்பாடி, பாஜ, டிடிவி உள்ளிட்டவர்கள் கவலையில் உள்ளனர். சொந்த காசில் சூனியம் வைத்துவிட்டோமோ என்று புலம்புகிறார்கள். அதிமுகவில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ என்ற இயக்கத்தை தொடங்கி, மீண்டும் கட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக, அவரது அணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிட்டனர். கடைசியில் தனி மரமான நிலையில், நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்து பேசிய சிறிது நேரத்தில் அதிமுக எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான அய்யப்பனும் (உசிலம்பட்டி தொகுதி), சட்டசபையில் 5 ஆண்டு கால திமுக ஆட்சியை பாராட்டி பேசினார்.

சட்டப்பேரவை கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள், முதல்வரை திடீரென சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ்,‘‘கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து பூங்கொத்து வழங்கினேன். திமுக ஆட்சியின் சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான் வரும்’’ என்று கூறினார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருப்பது, திமுக ஆட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இருப்பது தமிழக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி காலை, நடைபயிற்சி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பின்னர், அன்று மாலையே ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பியபோது, ‘அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் கிடையாது. எதிரியும் கிடையாது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்’ என்று அப்போதே புதிர் வைத்து பேசினார். இந்த நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவுக்கு ஆதரவான கருத்து தெரிவித்து இருப்பதால், வருகின்ற தேர்தலில் திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக இன்னும் ஒன்று, இரண்டு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், தமிழக அரசியலில் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ்சுடன் இருந்த பலரும் திமுகவில் இணைந்துள்ள நிலையில், தானும் திமுகவில் இணைவது என்ற ஒரு முடிவை எடுத்துவிட்டதாகவே தெரிகிறது. திமுக கூட்டணியில் இணைந்தால், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தேர்தலில் நிற்காவிட்டால் தனது மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளார். மேலும், அவரது தீவிர ஆதரவாளரான அய்யப்பனுக்கும் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்பார் என்று அவருடன் நெருக்கமாக உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியே ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அது நிறைவேறாமல் போகவே, சமீபத்தில் வெளிப்படையாகவே, ‘அதிமுகவில் இணைய நான் ரெடி, சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ரெடியா?’ என்று கேள்வி எழுப்பினார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி, முடியவே முடியாது என்று சாதித்துவிட்டார். இனி அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தற்போதைய ஒரே திட்டம், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற பார்முலாவை கையில் எடுத்துள்ள அவர், இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க முடியும் என்று நினைக்கிறாராம். அதேநேரம், ஓபிஎஸ்சின் இந்த முடிவால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழக பாஜ முன்னணி தலைவர்கள், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் கவலையில் உள்ளனர். சொந்த காசில் சூனியம் வைத்துவிட்டோமோ என்று புலம்புகிறார்கள்.

 

Tags : Edappadi ,BJP ,TTV ,OPS ,DMK ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,AIADMK ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்