சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி படிக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கட்டி பயில வேண்டும். அதுவும்கூட விண்ணப்பங்களை வழங்கி எங்கு காலியாக இருக்கிறதோ அந்த மருத்துவமனைகளில் தான் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் கட்டி வந்த ரூ.3 லட்சம் மொத்தமாக ரத்து செய்து விட்டார்கள். அதோடுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மாதத்திற்கு ரூ.25,000 பயிற்சி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அயலக மருத்துவ மாணவர்கள் ஏற்கெனவே மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் இந்தப் பயிற்சி மேற்கொள்ள தொடர்ந்து காலிப்பணியிடங்களை நோக்கி அலைய வேண்டி உள்ளது. அவர்களுடைய அலைச்சலை குறைப்பதற்கு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) சார்பில் புதிய இணைய முகமை (https://fmg.tnmedicalonline.co.in//MyCourse.aspx) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாணவர்கள் இந்த இணையதளத்தில் சென்று எந்த மருத்துவக்கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கின்றது என்கின்ற விவரம் தெரிந்து அவர்களே விண்ணப்பித்து அதற்கான ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான இணைய முகமை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
