தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று எண்பத்து ஏழு பணியாளர்கள் 15-வது 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பலனடைவார்கள். இதில் 48,006 ஓட்டுநர்களும், 42,825 நடத்துநர்களும், 13,003 தொழில்நுட்பப் பணியாளர்களும் மற்றும் 2,529 இதர பிரிவு பணியாளர்களும் உள்ளனர். புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட ஷரத்துகள் விவரம்:
2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை 2024ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சலவைப்படி ரூ.140 லிருந்து ரூ.160 ஆக உயர்த்தி வழங்கப்படும், தனி பேட்டா ரூ.16 லிருந்து ரூ.21 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ரிஸ்க் அலவன்ஸ் ரூ.9லிருந்து ரூ.14ஆக உயர்த்தி வழங்கப்படும். ஸ்டியரிங் அலவன்ஸ் ரூ.8 லிருந்து ரூ.13ஆக உயர்த்தி வழங்கப்படும். இரவு பணிப்படி ரூ.35 லிருந்து ரூ.40ஆக உயர்த்தி வழங்கப்படும். ஷிப்ட் அலவன்ஸ் ரூ.9லிருந்து ரூ.14ஆக உயர்த்தி வழங்கப்படும். இரவு தங்கல் படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓய்வறை உள்ள இடங்களில் ரூ.29 லிருந்து ரூ.34 ஆகவும், ஓய்வறை இல்லாத இடங்களில் ரூ.30 லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீங்கலாக மற்ற மாநிலங்களில் ஓய்வறை உள்ள இடங்களில் ரூ.31 லிருந்து ரூ.36 ஆகவும், ஓய்வறை இல்லாத இடங்களில் ரூ.32 லிருந்து ரூ.37 ஆக உயர்த்தி வழங்கப்படும். மலைப் பகுதிகளில் ஓய்வறை உள்ள இடங்களில் ரூ.26 லிருந்து ரூ.31 ஆகவும், ஓய்வறை இல்லாத இடங்களில் ரூ.32 லிருந்து ரூ.37 ஆக உயர்த்தி வழங்கப்படும். தையற்கூலி ஆண்களுக்கு ரூ.400 லிருந்து ரூ.500 ஆகவும், பெண்களுக்கு ரூ.300 லிருந்து ரூ.350 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.400 லிருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மலைப் பிரதேசப்படி ரூ.3000 லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். திருமண கடன் ரூ.50,000லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பண்டிகை முன்பணம் ரூ.10,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே முறையில் கணக்கீடு செய்து தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குறைந்தபட்ச தொகையாக நாளொன்றுக்கு ரூ.6 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர்கள் அவர்களது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த மேல்முறையீடு 90 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு முறை தளர்த்தி வரும் 30ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பரிசீலித்து, ஆணைகள் வழங்கப்படும் நாளிலிருந்து உரிய பலன்கள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தால் நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிலுவைத் தொகைக்கு ரூ.319.50 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும், மாதம் ஒன்றுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.