சென்னை: நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டின் சார்பில் உறுப்பினர்களாக உள்ள திமுகவை சேர்ந்த வில்சன், எம்.சண்முகம், அப்துல்லா மற்றும் கூட்டணி கட்சியான வைகோ (மதிமுக), அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சியான அன்புமணி (பாமக) ஆகியோரின் பதவி காலம் ஜூன்.24ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தவகையில் திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பினை வெளியிட்டது. திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இம்முறை இடம் வழங்கப்படவில்லை. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு சீட் அளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மதிமுகவின் முதன்மை செயலர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. ‘‘நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தமிழகத்தின் குரலாக அவர்கள் குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் ‘‘மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்’’: துரை வைகோ கருத்து appeared first on Dinakaran.