பாலக்காடு, மே 27: பாலக்காடு மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக 44 வீடுகள் சேதமடைந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட பேரிடர் மீட்புக்குழு சார்பில் கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டது. பாலக்காடு, ஆலத்தூர், மன்னார்காடு, பட்டாம்பி, அட்டப்பாடி, ஒத்தப்பாலம் மற்றும் சித்தூர் ஆகிய இடங்களில் கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 78.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பட்டாம்பி தாலுகாவில் குலுக்கல்லூர் ஊராட்சியில் 14 வீடுகளும், கொப்பம் ஊராட்சியில் 11 வீடுகளும், மன்னார்காடு தாலுகாவில் பாலக்கயம் ஊராட்சியில் ஒரு வீடும், அட்டப்பாடி தாலுகாவில் அகழி ஊராட்சியில் இரண்டு வீடுகளும், பாலக்காடு தாலுகாவில் கொடும்பு ஊராட்சியில் ஒரு வீடும், மங்கராவில் ஒரு வீடும், அகத்தேத்தராவில் ஒரு வீடும், மண்ணூர் ஊராட்சியில் 8 வீடுகளும், ஒத்தப்பாலம் தாலுகாவில் நெல்லாயா ஊராட்சியில் ஒரு வீடும் சேதமடைந்தன. மலம்புழாவில் ஒரு வீடும், மண்ணூரில் ஒரு வீடும் முழுமையாக சேதமடைந்தன.
கடந்த சனிக்கிழமை முதல் திங்கள் வரையில் 78.89 மிமீ மழை பதிவாகியுள்ளது. மன்னார்காடு தாலுகாவில் குந்திப்புழாவில் குளிப்பதற்காக சென்ற வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். சளவரா ஊராட்சியில் குருதிசால் வாய்க்காலில் முரளீதரனின் மகன் முபின் (25) மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இவர்களை மன்னார்காடு தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கண்ணாடி ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளன. கேரளாவில் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post கனமழை எதிரொலியாக 44 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.