பந்தலூரில் கன மழைக்கு பயணிகள் நிழற்குடை இடிந்து தரை மட்டம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

 

பந்தலூர், மே 31: பந்தலூரில் கனமழைக்கு அத்திமாநகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை தரைமட்டமானது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய கனமழை நீடிப்பதால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தும் மின்சாரம் துண்டித்துள்ள நிலையில் போர்கால அடிப்படையில் மின்வாரியத்தினர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பந்தலூரில் 65 மிமீ, சேரம்பாடியில் 52 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பந்தலூர் அருகே அத்தி மாநகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை நேற்று முன்தினம் பெய்த மழைக்கு இடிந்து தரைமட்டமானது. இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது, மேலும் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விலங்கூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் தார்சாலையில் மழைநீர் சூழ்ந்து மக்கள் நடமாட முடியாமல் இருந்து வருகிறது. சாலையில் சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு நெலாக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நரிக்கொல்லியில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் சாலையில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கினர்.

The post பந்தலூரில் கன மழைக்கு பயணிகள் நிழற்குடை இடிந்து தரை மட்டம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: