சாலைகள், குடியிருப்பு நிறைந்த பகுதியில் அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை

ஊட்டி, மே 30: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் அபாயகர மரங்களை படிப்படியாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் துவங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்கின்றன.

இந்த இரு முக்கிய பருவமழைகளை நம்பியே விவசாயம், குடிநீர் தேவைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. பருவமழை சமயங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி காணப்படும் ராட்சத கற்பூர மரங்கள், சீகை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுகின்றன. மேலும் வாகனங்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் விழுந்து பொருட்சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பருவமழையின்போது மரம் விழுந்து பலர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளிகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் அபாயகர மரங்கள் அதிகளவு உள்ளன.

இந்தாண்டுக்கான முன்கூட்டியே துவங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த ஞாயிறன்று ஊட்டியில் மரம் விழுந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் உயிரிழந்தான். கடந்த 6 நாட்களில் சுமார் 130க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டாலும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அபாயகர மரங்களை வெட்டி அகற்றிட என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனிடையே அபாயகர மரங்கள் படிப்படியாக அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலையோரங்களில் உள்ள அபாயகர மரங்கள் கணக்ெகடுக்கப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

இவற்றில் சில ராட்சத மரங்கள் சாலையில் இருந்து பல அடி வனத்திற்குள் உள்ளது. இவை பலத்த காற்று காரணமாக பல அடி நீளமுள்ள இவை விழும்போது சாலையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை ஒட்டுமொத்தமாக அகற்றுவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post சாலைகள், குடியிருப்பு நிறைந்த பகுதியில் அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: