தாய்சோலை, தங்காடு ஓரநள்ளி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஊட்டி, மே 30: நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்புகள் ஏற்பட்ட தாய்சோலை, தங்காடு ஓரநள்ளி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாட்கள் முன்னதாக கடந்த 24ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உணரப்பட்டது. தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு, மின்துண்டிப்பு, வீடு இடிதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே மேல்குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட தாய்சோலை பகுதியில் மழை காரணமாக சேதமடைந்த சாலையை கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை இயக்குநர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை மேற்கொண்டு சேதமடையாமல் இருக்க உாிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தங்காடு ஓரநள்ளி பகுதியில் சேதமடைந்த தடுப்புசுவரையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கெளசிக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தாய்சோலை, தங்காடு ஓரநள்ளி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: