இதில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு கடந்த வாரம் முதற்கட்டமாக ரஷ்யாவுக்கு சென்று பல்வேறு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த பின்னர் நேற்று முன்தினம் ஸ்லோவேனியா நாட்டிற்கு வந்தனர். இங்கு கனிமொழி குழுவினர் ஸ்லோவேனியா வெளியுறவு அமைச்சரும் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளருமான வோஜ்கோ வோல்க்கை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்பின்மையே இந்தியாவின் புதிய இயல்பு என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு ஸ்லோவேனியா கண்டனம் தெரிவித்ததற்கும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததையும் பாராட்டினர்.
மேலும், நாடாளுமன்ற வெளியுறவு கொள்கைக் குழுவின் தலைவர் பிரெட்ராக் பகோவிச் மற்றும் இந்தியா-ஸ்லோவேனியா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் மிரோஸ்லாவ் கிரிகோரிக் ஆகியோருடனான சந்திப்பில், தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய ஒருமித்த கருத்தையும், இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டையும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதே போல், தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் நியாயப்படுத்த முடியாத கொடூரமான தீமை என கண்டனம் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஸ்லோவேனியா தெரிவித்துள்ளது. இக்குழு அடுத்ததாக கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயினுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதே போல, பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்சிலும், பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையான குழு குவைத்திலும், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே தலைமையிலான குழு கத்தாரிலும், காங்கிரசின் சசிதரூர் தலைமையிலான குழு கயானாவிலும் பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
The post ஆபரேஷன் சிந்தூர் குறித்து கனிமொழி தலைமையிலான குழு ஸ்லோவேனியா அரசிடம் விளக்கம் appeared first on Dinakaran.