கோயில் நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

திருவள்ளூர், மே 25: திருவள்ளூர் அடுத்த மேலானூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் வகையறாவைச் சேர்ந்த ஸ்ரீ உமா மகேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 6ம் தேதி காலை மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. இந்நிலையில் இந்த கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வைக்கப்பட்ட மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் மின்மாற்றியில் பழுதடைந்துள்ள கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் இந்த மின் கம்பம் மற்றும் மின் மாற்றி கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உடனடியாக இதனை சீரமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் திருவள்ளூர் உதவி செயற் பொறியாளருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கலெக்டரை நேரில் அணுகி இது குறித்து புகார் அளிக்க இருப்பதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post கோயில் நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: