ஆவடி, மே 29: ஆவடி, கோவில்பதாகை, மசூதி தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (28). இவரது மனைவி பார்கவி (25). இவர்களின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பொன்னேரியில் இருந்து இவர்களது உறவினர்கள் வேனில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். பொன்னேரி, சின்னகுவனம் பகுதியைச் சேர்ந்த முனிவேல் (45) என்பவர் வேனை ஓட்டினார்.
காட்டூர் சிப்காட் அருகே வேன் வேகமாக வந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. முனிவேல், மாட்டின் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியபோது, அருகில் சென்ற லாரியில் உரசி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 20 பேரை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், வேன் ஓட்டுனர் முனிவேல், வேனில் பயணித்த ஆஷிகா (45), லதா (50), சுசீலா (40), ஜெகநாதன் (35) உள்ளிட்ட 12 பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலானய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பெயர் சூட்டு விழாவுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.