பள்ளிப்பட்டு, மே 28: பள்ளிப்பட்டில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 495 நீர்வழித்தடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று உதவி கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிப்பட்டு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீர்வழித்தடங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழையின்போது, நீர்நிலைகளுக்கு வெள்ளம் பாய்ந்து செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வழித்தடங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு அறிவுறுத்தலின்பேரில், பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை அம்மையார்குப்பம், வெடியங்காடு, நகரி சாலை, சித்தூர் சாலை உள்பட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முதன்மை சாலைகள், மாவட்ட இதர சாலைகளில் சிறு பாலங்கள் (கல்வெட்டு) பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி, நீரோட்டப்பாதையில் செடி கொடிகள் மற்றும் கோரைப்புல் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ் கூறுகையில்; பள்ளிப்பட்டு உதவி கோட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், கல்வெட்டு பகுதியில் தூர்வாரி செடி, கொடிகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 494 கல்வெட்டுகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உதவி பொறியாளர் நரசிம்மன், சாலை ஆய்வாளர்கள், முன்னிலையில் சாலைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
The post தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 495 நீர்வழித்தடங்களில் சீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.