அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 27 காலி பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வாலாஜாபாத்திற்கு நேற்று மாலை 3.45 மணி அளவில் புறப்பட்டு சென்றது. 4வது பிளாட்பாரத்தை கடக்கும்போது, எதிர்பாராத நிலையில் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயிலின் இன்ஜின் பகுதியில் இருந்து 2 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி இழுத்து சென்று, கீழ் இறங்கி சிமென்டாலான ஸ்லீப்பர் பலகை மற்றும் ஜல்லி கற்களில் புதைந்து நின்றது.மேலும், சக்கரம் பகுதிகளில் இருந்த ஸ்ப்ரிங்குகளும் உடைந்தும், கழன்றும் ஆங்காங்கே சிதறியது.

அதேபோல், ஒரு பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகி, அந்தரத்தில் தொங்கியது. இதையடுத்து, சரக்கு ரயிலை சாமார்த்தியமாக டிரைவர் அங்கேயே நிறுத்தினார். தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்து, சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஹூப்ளி எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: