நிலம் அளவீடு செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

பூந்தமல்லி, மே 23: சென்னை போரூரில் வருவாய் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சிவக்குமார் (34). இவர் போரூரில் உள்ள ஒருவரின் நிலத்தை அளவீடு செய்து அறிக்கை வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த நபர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இருக்கும் பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

நேற்று மாலை வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளர் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அருகில் இருந்த வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வருவாய் அலுவலர் அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ள கதவுகள் பூட்டப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்துச்சென்றனர்.

The post நிலம் அளவீடு செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: