* பிராட்வே, பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* ஓராண்டுக்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுத்தும் இன்னும் ஆக்கிரமிப்பாளர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
* ரூ.822 கோடியில் அமைய உள்ள மல்டி மாடல் வளாகத்தில் இரண்டு அடித்தளங்களுடன் 10 தளங்களும், பேருந்து நிலையத்திற்கு இரண்டு தளங்களும், வணிக நிறுவனங்களுக்கு 6 தளங் களும் ஒதுக்கப்படும்.
சோழிங்நல்லூர்: பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் வளாகம் கட்டும் பணிக்காக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம், நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது. பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கும், மெட்ரோ ரயிலில் எளிதில் பயணிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ள கோட்டை ரயில் நிலையம் மற்றும் குறளகம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.
அதேசமயம், இந்த பேருந்து நிலையம் சரிவர பராமரிக்கப்படாமலும், நவீன வசதிகள் மேற்கொள்ளப்படாமலும் கைவிடப்பட்டதால் பொலிவிழந்து, அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் இருக்கும் சூழலுக்கு உள்ளானது. எனவே, அடிப்படை வசதிகள், இடநெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளையெல்லாம் சரிசெய்து, பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகத்தை உருவாக்குவதென அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் மேலும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு மேலும் பயனுள்ளதாக அமையும் வகையிலும்,
பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது. இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி மூலம் பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பேருந்து நிலையம் அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.இந்நிலையில், மல்டி மாடல் வளாகத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பிராட்வே மற்றும் பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள விற்பனையாளர்களுக்கு 200க்கும் மேற்பட்டேருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் புதிய இடத்திற்கு செல்ல மறுப்பு தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அகற்றப்படும் என எச்சரிக்கை விடப்பட்டும் வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு இடங்களில் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அதிலும் அருகிலுள்ள உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளை நடத்தும் விற்பனையாளர்கள், தங்கள் கடைகளை நடைபாதைகளில் விரிவுபடுத்தி உள்ளனர். இதனால் மற்ற சாலை பயனர்களுக்கும் பேருந்து நிலையத்திற்கு வருபவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
இதுதவிர நடைபாதைகளில் கழிவுகளை கொட்டுவதால் அவை குப்பை குவியலாக காணப்படுகிறது. இதனால் நடைபாதைகளில் கடைகளை விரிவுபடுத்தியதை அகற்றியுள்ளோம். அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டவுடன், மெட்ரோ நிறுவனம் ரூ.822 கோடி மல்டி மாடல் வளாகத்தை கட்டுவதற்கான கட்டுமானத்தை தொடங்கும். இந்த வளாகத்தில் இரண்டு அடித்தளங்களுடன் 10 தளங்களும், பேருந்து நிலையத்திற்கு இரண்டு தளங்களும், வணிக நிறுவனங்களுக்கு ஆறு தளங்களும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.822 கோடியில் மல்டி மாடல் வளாகம் கட்டப்பட உள்ள நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.