கேஆர்பி அணையில் இருந்து 4500 கன அடி தண்ணீர் திறப்பு

* 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

* கலெக்டர், எம்எல்ஏ., நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 4,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் அணையை ஆய்வு செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பாலும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 3208 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 4208 கனஅடியானது.

அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. இதனால், அணையில் இருந்து விநாடிக்கு 4500 கனஅடி தண்ணீர், 3 மணல் போக்கி சிறிய மதகுகள் மற்றும் பிரதான 3 மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் சீறிப்பாய்ந்து அணை பூங்கா தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.

இதனால், தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் அணை போலீசார், சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கலெக்டர் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்புடைய ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆற்றினை கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2080 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 1700 கன அடியாக(நேற்று) குறைந்துள்ளது.

அணைக்கு வரும் வரும் தண்ணீர் அனைத்தும் ஏரிப்பகுதிகளில் விடப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீர்வளத்துறையினர் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். பாரூர் பெரிய ஏரி, அவதானப்பட்டி ஏரிகளில் தண்ணீர் நிரம்பி விட்டது.

எங்கெல்லாம் எரிகள் உள்ளதோ, அங்கெல்லாம் தண்ணீர் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரை கலந்து நீர் வருவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேரும் உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு சென்று நிரப்பும் பணியை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.ஆய்வின்பொது, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் பொன்னிவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 1,449 கன அடிநீர் திறப்பு

ஓசூர்: தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான தமிழக-கர்நாடக மாநில எல்லையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 2,200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் கலந்துள்ள நிலையில், நுரை பொங்கியது. கெலவரப்பள்ளி அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தின் மீது ஆள் உயர்ததிற்கு நுரை தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் தட்டகானப்பள்ளி சாலையின் குறுக்கே, தடுப்பு அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர். மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். நேற்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,101 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 1,449 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

கரையோர மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தவாறு உள்ளனர். நேற்று காலை நிலவரப்படி ஓசூரில் 72.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தேன்கனிக்கோட்டை 57, தளி 30, கெலவரப்பள்ளி 30, அஞ்செட்டி 15 என மிமீ மழை பெய்துள்ளது.

The post கேஆர்பி அணையில் இருந்து 4500 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: