கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் : கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்ததால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு கண்எரிச்சல், வாந்தி மயக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் – சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே, முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் உள்ள 6 லட்சம் லிட்டர் சாயக்கழிவு கொள்ளளவு கொண்ட பாய்லர் அதிக அளவிலான சூடு காரணமாக நள்ளிரவு வெடித்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, அருகில் உள்ள குடிகாடு கிராமத்தில் சாயக்கழிவு ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதி வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: