ஈரோடு, மே 13: ஈரோட்டில் ரயில் டிரைவர் வீட்டில் டிவி, பிரிட்ஜ், பேன் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். ஈரோடு ரயில்வே காலனி சாய்பாபா கோயில் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (52). இவர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் லோகோ பைலட் (என்ஜின் டிரைவர்) ஆக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் கேரள மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அனில்குமார், கடந்த மாதம் 23ம் தேதி, ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கேரளா சென்றார். இந்நிலையில், நேற்று காலை அனில்குமார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், பேன் உள்ளிட்டவை மாயமாகி இருந்தது.
வீட்டின் பின்புற கதவும் திறந்து கிடந்ததால், மர்மநபர்கள் வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றதை உணர்ந்தார். இதுகுறித்து அனில்குமார் ஈரோடு தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அனில்குமார் வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
The post ரயில் டிரைவர் வீட்டில் டிவி, பிரிட்ஜ் திருட்டு appeared first on Dinakaran.