மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக கள்ளழகர் வேடம்புரிந்து, தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு அழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த அழகரை மதுரையில் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எதிர்சேவை எனும் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் தொடர்ந்து இந்த எதிர்சேவை நடைபெற்றது. அதன் பிறகு இரவு 8 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார். நள்ளிரவு 11.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். இன்று அதிகாலை 2.30 மணிளவில் வழியில் உள்ள கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய அவர், காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அவரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். ஆற்றில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு வழி நெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர், இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ள மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதலே மதுரையில் குவிந்தனர். சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகளும் இம்முறை அழகர் விழாவை காண வரவழைக்கப்பட்டுள்ளனர்.
The post மதுரை வந்தவருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை வைகையில் இன்று இறங்குகிறார் அழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.