பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் குறிவைப்பதாக எச்சரித்த உளவுத்துறை: தேதி, இடம் மாறியதால் தடுக்கத் தவறினர்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் குறிவைப்பதாக உளவுத்துறை எச்சரித்ததாகவும், ஆனால் இடம், தேதி மாறியதால் அசம்பாவிதம் தடுக்கப்படாமல் போனதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு 2 வாரத்திற்கு முன்பாக, ஸ்ரீநகரின் புறநகரில் அமைந்துள்ள ஜபர்வான் மலைத்தொடர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கு 2 வாரம் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 19ம் தேதி கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான முதல் ரயிலை கொடியசைத்து வைத்து தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதாக இருந்தது. பிரதமரின் அந்த பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய ரயில் இணைப்பை பாகிஸ்தான் விரும்பாததால், தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.

ஆனால் ரயில் சேவை தொடக்கம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 22ம் தேதி அன்று ஜபர்வான் மலைத்தொடர் பகுதியில் நடந்து வந்த தீவிர கண்காணிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சரியாக அந்த நேரத்தில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை கொன்றுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது முதலிலேயே 2 தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளுடன் கலந்துள்ளனர்.

முதல் முறையாக துப்பாக்கி சூடு நடந்ததும், அனைத்து பயணிகளையும் அந்த 2 தீவிரவாதிகள் அங்குள்ள ஓட்டலின் உணவருந்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து 26 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் விட்டுச் சென்றவை என கூறப்படுகிறது.

* பைசரன் தொடர்பாக பொய் கூறிய அமித்ஷா
பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பைசரன் பள்ளத்தாக்கு பகுதி போலீஸ் அனுமதியின்றி திறக்கப்பட்டதாகவும் 2 நாளில் 1000 சுற்றுலா பயணிகள் வந்ததாக கூறினார். ஆனால், பைசரன் பள்ளத்தாக்கு பகுதி அமர்நாத் யாத்திரை மற்றும் கடும் குளிர் காலத்தில் மட்டுமே பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் எப்போதும் திறந்திருக்கும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் குறிவைப்பதாக எச்சரித்த உளவுத்துறை: தேதி, இடம் மாறியதால் தடுக்கத் தவறினர் appeared first on Dinakaran.

Related Stories: