பஹல்காமில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் தீவிரவாதத்தை கண்டு ஜம்மு காஷ்மீர் அரசு பயப்படாது: முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசம்

பஹல்காம்: “தீவிரவாதத்தை கண்டு ஜம்மு காஷ்மீர் அரசு சிறிதும் பயப்படாது” என முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதல் நடந்து ஒருமாதம் கடந்த நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காமில் நேற்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பஹல்காம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அங்கு சிறப்பு அமைச்சரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக ஒரேஅணியில் நின்ற ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு, குறிப்பாக பஹல்காம் மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

சுற்றுலா துறையை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை காஷ்மீர் அரசும், ஒன்றிய அரசும் எடுத்து வருகிறது. அண்மையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு சென்றபோது பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையின் தற்போதைய நிலை பற்றி விளக்கினேன். சுற்றுலாவை மேம்படுத்த ஆதரவை தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். தீவிரவாத செயல்களை கண்டு எனது அரசாங்கம் அஞ்சாது” என்று கூறினார்.

The post பஹல்காமில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் தீவிரவாதத்தை கண்டு ஜம்மு காஷ்மீர் அரசு பயப்படாது: முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: