உயர்கல்வி நிறுவனங்களில் சதி நடக்கிறது தகுதியானவர் கண்டறியப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம்

* இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜ-ஆர்எஸ்எஸ்சை எதிர்த்து போராடுவோம் என ராகுல் ஆவேசம்

புதுடெல்லி: ‘எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை சேர்ந்த தகுதியான நபர்களை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே ‘தகுதியானவர் கண்டறியப்படவில்லை’ என அறிவிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அந்த வீடியோவை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறியிருப்பதாவது:

‘தகுதியானவர் கண்டறியப்படவில்லை’ என்பது மனுவாதத்தின் புதிய வடிவமாக உள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் வேண்டுமென்றே ‘பொருத்தமற்றவர்கள்’ என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். கல்வி தான் சமத்துவத்திற்கான மிகப்பெரிய ஆயுதம் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆனால், மோடி அரசும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அந்த ஆயுதத்தை மழுங்கடிப்பதில் மும்முரமாக உள்ளது.

‘தகுதியானவர்கள் கண்டறியப்படவில்லை’ என்பதை காரணம் காட்டி, டெல்லி பல்கலையில், போராசிரியர் இடஒதுக்கீடு பணியிடங்களில் 60 சதவீதத்தையும், இணை பேராசிரியர்கள் இடஒதுக்கீடு பணியிடங்களில் 30 சதவீதத்தையும் காலியாக வைத்துள்ளனர். இதற்கு, ஐஐடிக்கள், மத்திய பல்கலைக்கழகங்களும் விதிவிலக்கல்ல. அங்கும் உட்பட அத்தனை இடங்களிலும் இந்த சதி நடக்கிறது.

தகுதியான நபர்கள் கண்டறியப்படவில்லை என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். சமூக நீதிக்கும் செய்யும் துரோகம். இடஒதுக்கீடு பெறுவது என்பது உரிமைகள், மரியாதை மற்றும் பங்கேற்புக்கான போராட்டம். இதைப் பற்றி நான் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினேன். நாம் அனைவரும் சேர்ந்து பாஜ, ஆர்எஸ்எஸ்சின் ஒவ்வொரு இடஒதுக்கீட்டிற்கு எதிரான நடவடிக்கைக்கும் அரசியலமைப்பின் சக்தியுடன் பதிலளிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

* வரலாற்றை அழிக்க முயற்சி
ராகுல் காந்தி பகிர்ந்த வீடியோவில் மாணவர்களுடன் அவர் உரையாடுகையில், ‘‘இந்துத்துவா திட்டத்தின் அடித்தளம், எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களின் வரலாற்றை அழிப்பதாகும். நமது நாட்டின் 90 சதவீத வரலாறு ஏன் நமது பாடபுத்தகங்களில் இல்லை? 10 சதவீத வரலாறு மட்டுமே ஏன் உள்ளது? உதாரணமாக, நமது வரலாற்றுப் புத்தகங்களில் 3,000 ஆண்டுகளாக தலித்துகள் புறக்கணிக்கப்பட்டனர், மதிக்கப்படவில்லை, சமூகத்தில் அவர்களுக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை என்று ஏன் எழுதப்படவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.

* பொய், வஞ்சகத்தின் தூதர் ராகுல் காந்தி
ராகுல் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பதிவில் அளித்த பதிலில், ‘‘ராகுல் காந்தியும், காங்கிரசும் நாட்டின் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மிகப்பெரிய பிராண்ட் தூதர்களாக மாறிவிட்டனர். 2004-14 வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஐஐடிகளில் 83 எஸ்சி, 14 எஸ்டி, 166 ஓபிசி பேராசிரியர்களும், என்ஐடிகளில் 261 எஸ்சி, 72 எஸ்டி, 334 ஓபிசி பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

அதுவே, 2014-24 வரை மோடி ஆட்சியில், ஐஐடிகளில் 398 எஸ்சி, 99 எஸ்டி, 746 ஓபிசி பேராசிரியர்களும் என்ஐடிகளில் 929 எஸ்சி, 265 எஸ்டி, 1510 ஓபிசி பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசின் கொள்கை காரணமாகவே தகுதியானவர்கள் கண்டறியப்படாத பிரச்னை இப்போது வரை தொடர்கிறது’’ என்றார்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் சதி நடக்கிறது தகுதியானவர் கண்டறியப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் appeared first on Dinakaran.

Related Stories: