வேலூர் கோட்டையில் இன்று ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கடந்த 1981ம் ஆண்டு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தொடர்ந்து பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 44வது பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (30ம் தேதி) மாலை 6 மணியளவில் கிராம தேவதை செல்லியம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

நேற்று மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடந்தது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் துவஜாரோகணம் நந்தி கொடியேற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், அன்னவாகனத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 10வது நாளான வரும் 11ம் தேதி ராவணேஸ்வரர் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மறுநாள் (12ம் தேதி) பஞ்ச பிரகார உற்சவமும், கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதலும் நடக்கிறது. அன்று இரவு 10 மணியளவில் புஷ்பப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 13ம்தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. மறுநாள் (14ம் தேதி) உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

The post வேலூர் கோட்டையில் இன்று ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: