சாயர்புரம் அருகே பயங்கரம் மனைவியை கழுத்தறுத்து கொன்று தாம்போதி பாலத்தில் உடல் வீச்சு

*கணவருக்கு போலீஸ் வலை

ஏரல் : சாயர்புரம் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு தாம்போதி பாலம் அடியில் அவரது உடல் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ள அவரது கணவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நம்மாழ்வார் நகர் 50 வீட்டை சேர்ந்தவர் மரியசாமுவேல் (61). இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்.

இவருக்கு ஜோஸ்பின்மேரி (57) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் திருமணமாகிய நிலையில் மூத்த மகன் அருண்ராஜ் பெங்களூருவிலும், 2வது மகன் ஆனந்தராஜ் தென்ஆப்பிரிக்காவிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் மரியசாமுவேல் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின்மேரி ஆகியோர் மட்டும் நம்மாழ்வார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று மதியம் வீட்டு அருகில் உள்ள ஒரு தாம்போதி பாலத்தின் அடியில் ஜோஸ்பின்மேரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது உறவினர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சாயர்புரம் எஸ்ஐக்கள் அந்தோணி சூசைராஜ், சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோஸ்பின்மேரி உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த வைகுண்டம் டிஎஸ்பி (பொறுப்பு) ஜமால் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். ஜோஸ்பின் மேரியின் கணவர் மரியசாமுவேல் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகி உள்ளதால் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். உடலை மறைப்பதற்காக தாம்போதி பாலத்தின் அடியில் போட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தலைமறைவான மரியசாமுவேலை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சாயர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சாயர்புரம் அருகே பயங்கரம் மனைவியை கழுத்தறுத்து கொன்று தாம்போதி பாலத்தில் உடல் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: