குடியுரிமை திருத்தச் சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சித்தது. இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இஸ்லாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிகிறேன். வக்பு சட்டமானது 1954ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பாஜ கூட்டணி அரசு சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான முன்வரைவினை கடந்த 8-8-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம். வக்பு சட்டத்தை திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
* வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன்மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும்.
* அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து, இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துகளை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.
* ‘ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும்’ என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளை செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
* இஸ்லாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
* மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.
* வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்பு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.
* ‘வக்பு பயனர்’ என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.
* அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்பு என கருதப்பட மாட்டாது. இந்த பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்து பார்க்கவில்லை.
இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது. இதனை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் 30.9.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாக சொல்லி இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம் பெற்ற திமுக உறுப்பினர்களான ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கடுமையாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். திமுக மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்து இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்நிலையில் வக்பு திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று கருதுகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன.
இந்த திருத்தச் சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மதநல்லிணக்கம் – அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி (அதிமுக), அசன்மவுலானா (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைசெல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிய கம்யூ.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் பேசினர்.
வானதி சீனிவாசன் (பாஜ) தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி, வெளிநடப்பு செய்தார். இதையடுத்து வக்பு சட்டத் திருத்த முன்வடிவினை, முழுமையாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அவையில் இருந்த அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* ‘ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும்’ என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளை செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
* மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.
* தீர்மான விவரம்…
‘‘இந்திய திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு அரசமைப்பு சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதை பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995 வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வடிவினை, முழுமையாகத் திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அமைகிறேன்.
The post நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு மசோதாவை திரும்ப பெற தீர்மானம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றம்; பாஜ வெளிநடப்பு appeared first on Dinakaran.