ஏனெனில், அவினாசி சாலையில்தான் விமான நிலையம் அமைந்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்கங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இதுமட்டுமின்றி சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கோவை மாநகரை அடைவதற்கு அவிநாசி சாலைதான் முக்கியமான சாலையாக உள்ளது.
அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏராளமான பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் கிட்டத்தட்ட நீலாம்பூர், கனியூர் தாண்டி, கருமத்தப்பட்டி வரை இருக்கின்றன.
இதில், நீலாம்பூர் வரை கோவை மாநகரத்தின் அங்கமான பகுதிகளாகி மாறிவிட்டன.
இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 2010-ம் ஆண்டு இச்சாலை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621.30 கோடி மதிப்பில் 10.01 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் (விங்ஸ்) அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வரும் இப்பாலம் கட்டுமான பணி முடிவடைந்தால், அவினாசி சாலையில் வாகன நெரிசலுக்கு தீர்வு வந்துவிடும்.
இந்த மேம்பால கட்டுமான பணியினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். கலெக்டர் உத்தரவை ஏற்று, பாலம் கட்டுமான பணி தற்போது வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இவ்வளவு நீண்ட பாலம் இல்லை எனக்கூறும் அளவுக்கு இப்பாலத்தின் கட்டுமான பணி படுவேகமாக நடந்து வருகிறது.
இதுபற்றி கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறுகையில், ‘‘மாநகர போக்குவரத்து கட்டமைப்பை எடுத்துக்கொண்டால், கோவை அவினாசி சாலை இதயப்பகுதி போன்றது.
இச்சாலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன்கூடிய மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேம்பாலம் கட்டும் பணி தற்போது 92 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
நீலாம்பூர் வரை விரிவடைகிறது
கோவையின் முக்கிய அடையாளமாக மாறப்போகும் இந்த பாலம் கட்டுமான பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று, கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை சுமார் 5 கிமீ தூரத்துக்கு மேம்பாலத்தை நீட்டிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தமுறை, கோவை வந்தபோது உத்தரவிட்டார்.
அதன்படி கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்கி, சில மீட்டர் தொலைவில் மீண்டும் மேம்பாலத்தில் ஏறிச்செல்லும் வகையில் திட்டமிட்டு பணிகள் தொடங்கி உள்ளன. சுமார் ரூ.800 கோடி செலவில் துவங்கியுள்ள இப்பணிகளும் முடிந்தால், கோவை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடியோடு குறைந்துவிடும்.
The post ரூ.1,621 கோடியில் ஒரு பிரம்மாண்டம் அவினாசி சாலை மேம்பால பணி 92 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.