அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு தரமான லேப்டாப்: பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சென்னை: அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு தரமான லேப்டாப் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசும்போது, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக ரூ.2 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து ஒரு கூட்டல் கணக்கு போட்டுப் பார்த்தால் ஒரு லேப்டாப் 10 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் தரமான கணினியை வழங்க முடியுமா என்று ஒரு மனக்கணக்கை போட்டு பேசினார்.

இந்த திட்டம் அறிவிக்கின்றபோது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால், அதற்கு முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த ஆண்டு வருகிறபோது மேலும் அதற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கும்போது, இப்போது நீங்கள் அந்த கணக்கை கூட்டி, கழித்து பார்ப்பீர்கள் என்று சொன்னால் அந்த கணக்கு உங்களுக்கு சரியாக வரும். மாணவர்களுக்கு தரமான மடிக்கணினியை வழங்கிட அரசு உறுதி பூண்டிருக்கிறது. தரம் குறித்த கவலை வேண்டாம். ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் அளவிலே இருக்கும். அதுவும் தரமாக வழங்கப்படும். ஒப்பந்தப்புள்ளி திறந்த பின், தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும்.

நான் இந்த நிதி ஒதுக்கம் குறித்து மனக்கணக்கு என்று சொன்னேன். அந்த மனக்கணக்கின் அடிப்படையில், சற்று கவனக்குறைவாக என்னுடைய அண்ணன் தங்கமணி மனக்கணக்கு போட்டுவிட்டார். அவருக்கும், இங்கே உட்கார்ந்திருக்கக்கூடிய எனது சக அதிமுக உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஓர் அன்பான வேண்டுகோளையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் கூட்டல், கழித்தல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய கூட்டல், கழித்தல் கணக்கை எல்லாம் வேறோர் (டெல்லி) இடத்திலே உட்கார்ந்து, இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து, உங்களுடைய தொண்டர்களுடைய எதிர்காலம், உங்களுடைய அனுதாபிகளுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப் போகச் செய்யக்கூடிய அளவிற்கு சாணக்கிய தந்திரத்தோடு, இந்த கணக்குகளை சிலர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வேன். இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக நீங்கள் இருந்துவிட்டதைப்போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கணத்தை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும், நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

The post அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு தரமான லேப்டாப்: பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: