அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கரில் 1,453 வீடுகள் கட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதும் அதற்காக ரூ.27.90 கோடி பணம் ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக தனது மகன் நடத்தும் முத்தாம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் பெறப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வைத்திலிங்கம், அவரது மகன் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இதையடுத்து வைத்திலிங்கம் தொடர்பான இடங்கள் மற்றும் ரூ.27.90 கோடி லஞ்சம் கொடுத்த ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் தொடர்பான இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாடு பகுதியில் உள்ள வீடு, தஞ்சை கணபதி நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் இளைய மகன் டாக்டர் சண்முக பிரபு வீடு,

சென்னை அசோக் நகர் 10வது அவென்யூவில் உள்ள மகன்கள், மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தி.நகரில் உள்ள மூத்த மகன் பிரபு வீடு, எழும்பூரில் உள்ள எம்எம்டிஏ தலைமை அலுவலகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் அறை என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து அசோக் நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன், மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் மட்டும் நேற்று 2வது நாளாக சோதனை நடந்தது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று அதிகாலை 1.30 மணிக்கு நிறைவு பெற்றது. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: