அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர், பெண் மீது புகார்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த லலிதா என்பவர் நேற்று, எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது. அவரை சந்திக்க வந்து சென்ற பெண் ஒருவர், அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வந்து நட்பானார். பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனர் பொறுப்பில் இருப்பதாக கூறினார். அவர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் எனது மகனுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக ரூ.4.50 லட்சத்தை, எனது வீட்டை அடகு வைத்து நான் கொடுத்தேன். இதே போல எனது உறவினர்கள் உள்பட பலருக்கும் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெற்றார். அந்த வகையில் மொத்தம் 27 பேர் தங்களது வீடு மற்றும் நகை ஆகியவற்றை அடமானம் வைத்து மொத்தம் ரூ.1.47 கோடி கொடுத்து உள்ளனர். ஆனால் போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றினார்.

இதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் இப்போது வேறு மாவட்டத்துக்கு மாறி சென்று விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த பெண்ணை தேனி மாவட்டத்தில் கைது செய்து இருப்பதை அறிந்தோம். அவர் மூலம் குமரி மாவட்டத்திலும் பலர் ஏமாந்து உள்ளதால், குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர், பெண் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: