தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என்பதா? சீமான் ஒரு கூலி அரசியல்வாதி: அமைச்சர்கள் கடும் தாக்கு

அரியலூர்: தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என கூறிய சீமான் ஒரு கூலி அரசியல்வாதி என அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்துகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராபிட்டோ பைக் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இவைகள் வாடகைக்கு பயன்படுத்த படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்து தமிழகத்தில் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி சீமான் பேசிய கருத்து குறித்து கேட்டபோது, ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனை அறிந்தவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என கூறிய சீமான் கூலி அரசியல்வாதி. அவர் அப்படித்தான் பேசுவார். இவர்களை மக்கள் பார்த்து கொள்வார்கள்’ என்றார். தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, 22 உயர்நிலை, மேல்நிலை பள்ளி என 54 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டில் வருகிற 23ம்தேதி முதல் 28ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து வாழ்த்தினார். இதைதொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனைக்குரியது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என்பதா? சீமான் ஒரு கூலி அரசியல்வாதி: அமைச்சர்கள் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: