காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாரை நீக்க தீர்மானம்: கோவை கூட்டத்தில் நிறைவேற்றம்

கோவை: கோவை புலியகுளம் ரெட்பீல்ட்ஸ் சாலையில் உள்ள செயின்ட் ஆண்டனிஸ் பேரிஸ் ஹாலில் ‘‘கோவை காங்கிரசை காப்போம், காங்கிரசை வளர்ப்போம்’’ என்ற தலைப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினீயர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இதில், ‘‘காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் என்கிற பதவியை வைத்துக்கொண்டு, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முடக்கி வைத்துள்ள மயூரா ஜெயக்குமாரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் செல்லாது: – மயூரா ஜெயக்குமார்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மயூரா ஜெயக்குமார் கூறுகையில், ‘நான், கட்சியின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். கோவையில், சில நிர்வாகிகள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி, என்னை நீக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது செல்லாது. இப்படி தீர்மானம் நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை மற்றும் அகில இந்திய தலைமைக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளேன். கட்சியின் அடிப்படை விதிகளை மீறி செயல்படுகிறவர்கள் யார்? யார்? என்பது கட்சியின் மேலிட தலைமைக்கு நன்றாக தெரியும்’ என்றார்.

The post காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாரை நீக்க தீர்மானம்: கோவை கூட்டத்தில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: