தனிநபர் இல்ல நூலகத்திற்கு பரிசு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

திருவாரூர், செப்.24: திருவாரூர் மாவட்டத்தில் புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் வரும் 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தக திருவிழாவினை நடத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவீர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் அரசின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதோடு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க முன்வருவார்கள் என்பதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்ந்த்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு விருது ரூ.3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் கலெக்டரால் திருவாரூர் புத்தக திருவிழாவின்போது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட புத்தக ஆர்வலர்கள் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்துவருவோர் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெயர், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், நாகை பைபாஸ் சாலை, திருவாரூர் 610001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது dlothiruvarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தனிநபர் இல்ல நூலகத்திற்கு பரிசு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: