பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிர்வுத்தொகை பெறபயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், செப்.24: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் விண்ணப்பித்து பயனடைந்து, வைப்புத்தொகை பத்திரம் பெறப்பட்டு இப்போது 18 வயது முதிர்வடைந்த பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிர்வுத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகம்,

மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வைப்புத்தொகை ரசீது ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பயனாளிகள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களை உடனே அணுக வேண்டும். மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர்கள் உடன் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிர்வுத்தொகை பெறபயனாளிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: