கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கோவிந்தராஜ சுவாமி பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இந்த விஷ்ணு கோவிலில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பிரம்மோற்சவம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் கோயிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான். அதனால் விஷ்ணு கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தக்கூடாது, அதனை அனுமதிக்கக்கூடாது என்று பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த பிரம்மோற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதையடுத்து கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை ஏன் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்களுக்கு தெரியாமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: