ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

*உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகை

ஈரோடு : காதல் திருமணம் செய்த இளம்பெண் இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்த சித்ராதேவி மகள் மீனா (21). இவரும் கணபதிபாளையம் அருகே மண்ணாதம்பாளையம் சேர்ந்த யுவராஜ் (25) என்பரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

யுவராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் யுவராஜ் நேற்று முன்தினம் மாலை மீனாவின் அம்மா சித்ரா தேவியை தொடர்பு கொண்டு, மீனாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணபதிபாளையத்தில் உள்ள மருத்துமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

அவர் அங்கு சென்ற பார்ததபோது மீனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மீனாவை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மீனாவின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், மீனாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தினை முற்றுகையிட்டு, மீனாவின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதையடுத்து, அங்கிருந்த போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில், அங்கிருந்த உறவினர்கள் கலைந்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். மீனாவின் தற்கொலை குறித்து ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: