சிவகங்கை, ஆக.4: சிவகங்கை அருகே மதகுபட்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், காங்கிரசிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி.ஆர்.சுந்தரராஜன் வரவேற்பு உரையாற்றினார். பின்னர் அமைச்சர் டி.கே. பிரபு பேசியதாவது: தவெக ஆட்சி அமைந்த பிறகு, சிவகங்கையை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு இந்த நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒவ்வொரு தொகுதியையும் முன்னோடித் தொகுதியாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தினமும் மக்களுக்காக உழைப்பார்கள். தமிழக அரசு அமைந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடினார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டது. வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படும் கனிமங்களைத் தடுத்து, நமக்குத் தேவையான கனிம வளங்கள் நமக்கு மட்டுமே கிடைக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார் என்றார். இதனை தொடர்ந்து 2000 ஆயிரம் நபர்களுக்கு அரிசி பை மற்றும் தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட 5052 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், அனைவருக்கும் மதிய அசைவ விருந்தும் வழங்கப்பட்டன. இதில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா சிறப்பு அழைப்பாளராகவும், எம்எல்ஏகள் குழந்தை ராணி நாச்சியார், சீனிவாச சேதுபதி, இளங்கோவன், மாவட்டச் செயலாளர்கள் முத்துபாரதி, ஜோசப் தங்கராஜ், மூத்த நிர்வாகி துரை கருணாநிதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
