சேலம், ஆக.4: சேலம் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் கும்பல் ஒன்று மோசடி செய்து வருகிறது. இதுதொடர்பான புகார்கள் சைபர் கிரைமில் அதிகரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வாழ்வில் தவிர்க்க முடியாத சக்தியாகி விட்ட செல்போனால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறதோ, அதேஅளவில் பாதகத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் மர்ம நபர்கள் செல்போனை அதிகளவில் பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆன்ட்ராய்டு செல்போனில் உள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி, போட்டோக்களில் உள்ள பெண்களின் முகத்தை மட்டும் தனியாக எடுத்து மார்பிங் செய்து, ஆபாச படமாக தயாரித்து மிரட்டி சிலர் பணம் பறித்து வருகின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தும் பணத்தை அபேஸ் செய்யும் வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து புகார்கள் குவிந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மோசடியால் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்து வருகின்றனர். தற்ேபாது, பள்ளி கல்வித்துறையின் பெயரை பயன்படுத்தி சிலர் கல்வி உதவித்தொகை என்ற பெயரில், மாணவர்களின் பெற்றோரிடம் ஆன்லைனில் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தொடர்கிறது. சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் ஆன்லைன் கும்பல், உங்களது குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இதை பெற ரூ.18 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை பின்னர் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
இதைதொடர்ந்து பெற்றோரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கியூஆர் கோடு ஸ்கேன் குறியீட்டை அனுப்பி வைத்து அதன் மூலம் பணம் செலுத்துமாறு கூறுகின்றனர். மேலும் பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே உதவித்தொகை பெற்றதாக கூறி சில பெற்றோர்களுக்கு அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டை போலியாக அனுப்பி வைக்கின்றனர். இதை உண்மை என நம்பும் சில பெற்றோர், சம்பந்தப்பட்ட எண்களுக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர். பின்னர், பணம் செலுத்திய ஓரிரு நாட்களில் அவரது வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையையும் அந்த கும்பல் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றி விடுகிறது. இந்த மோசடி சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரியில் அதிகமாக நடந்து வருகிறது. இதுதொடர்பான புகார்கள் சைபர் கிரைமில் குவிகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பள்ளி கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதற்காக பெற்றோர்களிடம் யாரும் தொடர்பு கொள்வதில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக உதவித்தொகை அனுப்பப்படுகிறது. கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் அனுப்பப்படுவதில்லை. இதுதொடர்பாக வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம். கடந்த காலங்களில் இதுபோன்ற மோசடிகளில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மோசடி நபர்களிடம் ஏமாறாமல் பெற்றோர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும்,’’ என்றனர்.
1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘தற்போது கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல், பள்ளி மாணவர்களின் பெயரை வைத்து பெற்றோர்களிடம் செல்போனில் பேசி, அவர்களை நம்ப வைத்து அவர்களிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்து வருகின்றனர். இந்த கும்பல் மோசடியாக பணத்தை எடுப்பது தெலங்கானாவில் உள்ள வங்கி கணக்கில் ேசர்க்கப்படுகிறது. தற்போது கல்வி உதவி தொடர்பாக பணத்தை இழக்கும் பெற்றோர் சைபர் கிரைமில் புகார்கள் அளித்து வருகின்றனர். அவர்களின் பணத்தை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணத்தை இழக்கும் பெற்றோர் உடனடியாக சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930ஐ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுதர இயலும்,’’ என்றனர்.
