தெரு நாய்கள் கடித்து மான்கள் உயிரிழப்பு

 

சென்னை: மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. அவ்வப்போது இரைத்தேடியும் தண்ணீர் தேடியும் வழி தவறி ஊருக்குள் வந்து பாதிப்பை சந்தித்து வருகின்றன. மீஞ்சூர் அருகே வெள்ளம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரை தேடி வழி தவறி ஊருக்குள் வந்த புள்ளிமான் ஒன்றை தெரு நாய்கள் துரத்தி கடித்துக் குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

இதேபோல வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இரைத்தேடி வழி தவறி சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சினைமான் ஒன்று பலத்த காயம் அடைந்தது. அதேபோல் மவுத்தும்பேடு கிராமத்தில் நாய்கள் குதறியதில் மான் பரிதாபமாக உயிர் பிரிந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினைமானை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்த மானின் சடலத்தை கைப்பற்றி சென்றனர். அண்மையில் மீஞ்சூர் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி 2 புள்ளிமான்கள் உயிரிழந்தன. புள்ளிமான்களின் உயிரிழப்பை தவிர்த்திடும் வகையில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: