திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தபோது வயதான பாதுகாவலரை சரமாரி தாக்கிய பெண்:வீடியோ வைரல்; போலீசார் விசாரணை

 

தாம்பரம்: திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த பெண் ஒருவர் வயதான பாதுகாவலரை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் உள்ள நேஷனல் திரையரங்கில் ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தைக் காண நேற்று முன்தினம் காரில் ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். திரையரங்க வளாகத்திற்குள் வந்தபோது காரை முறையாக நிறுத்தும்படி திரையரங்க பாதுகாவலர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்த குடும்பத்தினர் திரையரங்க பாதுகாவலருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது திரையரங்கு வளாகத்தில் இருந்து குடும்பத்தினரின் கார் வெளியே சென்றுள்ளது. அதே நேரம் திரையரங்கில் மற்றொரு காட்சியை காண்பதற்காக பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது திரையரங்கின் வெளியே இருந்து உள்ளே கார் ஒன்று நுழைந்ததால் படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியே காரில் சென்ற குடும்பத்தினரின் காரை திரையரங்கு பாதுகாவலர் நிறுத்தி வெளியே இருந்து வரும் கார் உள்ளே சென்றவுடன் அவர்களை வெளியே செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது காரில் இருந்த பெண் ஆத்திரமடைந்து கீழே இறங்கி வந்து வயதான பாதுகாவலரை சட்டையை பிடித்து கிழித்து கன்னத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த மற்ற பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை திரையரங்கிற்கு வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தாம்பரம் போலீசார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பாதுகாவலரிடம் இருந்து புகார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். வயதானவர் என்றும் பாராமல் வீண் தகராறு செய்து முதியவரை கடுமையாக தாக்கிய பெண் மீது உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: