ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளின்றி வியாபாரி, மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இங்கு காய், கனி, மலர் மற்றும் மளிகை என தனித்தனி கடைகள் அமைத்து வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் மட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து வியாபாரிகளும் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு செல்வது வழக்கம்.

இங்கிருந்து பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக காய், கனி, மலர் மற்றும் மளிகை பொருட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாக கொள்முதல் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.100 முதல் 150 கோடி வரை வருமானம் கிடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துபாய், சிங்கப்பூர், மலோசியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மேலும், விஷேச நாட்களில் இந்த ஏற்றுமதி அதிகரிப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கழிவுநீர் பிரச்னை மற்றும் கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படாதது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் இதைப் பொருட்படுத்துவதில்லை என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.முன்னதாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், பெரிய அளவில் இயங்கி வந்த மதுபானக் கடை ஒன்று தற்போது மூடப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் புதிய மதுபானக் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்த மதுபானக் கடையிலிருந்து மட்டும் நாளொன்றுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் வருமானம் நடைபெறுவதாக பேசப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பலர் வேலை முடிந்தவுடன் அங்கு சென்று மது அருந்துவது வழக்கமாக ஒன்றாக உள்ளது. இரவு நேரங்களில் குறிப்பாக கடை அடைக்கப்பட்ட பிறகு கள்ளச் சந்தைகளில் மது விற்பனை பெருமளவில் நடைபெறுவதாகவும். இது தொடர்பாக சி.எம்.டி.ஏ மற்றும் கோயம்பேடு சரக காவல்துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புகார் கொடுத்தும் வருகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு சந்தையின் நிர்வாகம், மக்களின் மற்றும் வியாபாரிகளின் குறைகளையும் கேட்டறிந்து போர்க்கால அடிப்படையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: