சென்னை: வீராணம் ஏரி ஷட்டர்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து போலீசாருடன் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியின் ராதா மதகில் உள்ள ஷட்டர்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்துவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அதிகாரிகள் மற்றும் புத்தூர் காவல் நிலைய போலீசார் இணைந்து இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வரும் நிலையில், சில மர்ம நபர்கள் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை வீணாக வெளியேற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியில் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, நீர்வளத்துறை உதவி பொறியாளர் படைக்காத்தான் தலைமையில் நீர்வளத்துறை பணியாளர்கள் மற்றும் புத்தூர் போலீசார் இணைந்து ராதா மதகு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேர தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் தென்பட்டாலோ அல்லது ஷட்டர்களை சேதப்படுத்தும் முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்தாலோ உடனடியாக காவல்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
