×

திருப்பூரில் சோகம் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

*கடைசியாக போனில் பேசிய நபர் யார்? என விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் ராஜா. இவரது இரண்டாவது மகள் ரஞ்சனி (23). இவர், தமிழ்நாடு காவல்துறையில் 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது ரஞ்சனி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

இவர் நல்லூர் அடுத்துள்ள நல்லிகவுண்டன் பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சனி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் 2 பேருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ரஞ்சனி வழக்கம்போல் ஆயுதப்படையில் நடக்கும் வருகை அணி வகுப்பில் கலந்து கொண்டார்.

அதன்பின், ரஞ்சனியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ரஞ்சனியை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த ரஞ்சனி அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றார்.

இதையடுத்து, வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்த இவரிடம் அருகில் இருந்தவர்கள் ஏன் வேலைக்கு செல்லாமல் வந்தீங்க என கேட்டதற்கு ரஞ்சனி பதில் ஏதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டினார்.பின்னர், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அருகில் வசிப்பவர்கள் கதவை தட்டி திறக்கும் படி கூறினர்.

ஆனால், வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராததால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், நல்லூர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சனி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரஞ்சனி வழக்கமாக நடக்கும் வருகை அணி வகுப்பில் இருந்தபோது அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரஞ்சனியை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த ரஞ்சனி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது. கடைசியாக ரஞ்சனியுடன் போனில் பேசிய நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruppur ,Raja ,Chengam taluka ,Tiruvannamalai district ,Ranjani ,Tamil Nadu… ,
× RELATED கூட்டணி கட்சி மந்திரிக்கு...