×

வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய சிவந்திபுரத்தில் 3.70 டன் கழிவுகள் அகற்றம்

*தன்னார்வலர்களின் நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சி

விகேபுரம் : சிவந்திபுரத்தில் வடக்குகோடைமேலழகியான் கால்வாய் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய 3.70 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் அனவன்குடியிருப்பு, டாணா, விகேபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், அம்பை வழியாக கடைமடை வரை சென்று சேருவதில்லை என்று விவசாயிகள் புகார் ெதரிவித்தனர்.

இதற்கு கால்வாயில் அமலை செடிகள் ஆக்கிரமித்து இருப்பதாலும், குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 33 பாலங்கள் உள்ளது. இந்த பாலங்களுக்கு அடியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து சமூக ஆர்வலர் மூர்த்தி தலைமையில் மாரி, முருகன், பிரதாப், விஜய், ஆண்டனி, மூர்த்தி ஆகியோர் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் தண்ணீர் தங்கு செல்ல ஏதுவாக அமலை செடிகள், பாட்டில்கள், பிளாஸ்டிக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சிவந்திபுரம் கீழ்மடத்துப் பாலம் பகுதியில் வடக்கு கோடை மேலழகியன் கால்வாயில் பாலங்களுக்கு அடியில் நீரின் போக்கை தடுத்த கழிவுகள் அகற்றப்பட்டது.

நேற்று வரை விகேபுரம் முதல் சிவந்திபுரம் வரை 13 பாலங்களில் அமலைசெடிகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதால் வடக்கு கோடை மேலழகியன் கால்வாயில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்கிறது. நேற்று மேலசிவந்திபுரம் கீழ மடத்துப்பாலத்தின் அடியில் 3.70 டன் கழிவுகளும், ஞானியார்தோப்பு பாலத்தின் அடியில் 200 கிலோ மற்றும் புலவன்பட்டி பாலத்தின் அடியில் 250 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டது.

Tags : Sivanthipuram ,North Kodai Melazhagiyan Canal ,Vikepuram ,Papanasam dam ,
× RELATED மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோடி,...