ஊட்டி : தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வரும் நிலையில், விளைச்சல் குறைவு காரணமாக ஊட்டியில் செல்லரி, லீக்ஸ்,ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்ட சைனீஸ் ரக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும், சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளாக தாம்பட்டி, கொதுமுடி, கவரட்டி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லிமலை ஒரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பர்க், செல்லரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இந்த காய்கறிகள் நட்சத்திர ஒட்டல்கள் போன்றவற்றில் நூடுல்ஸ்,சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
நீலகிரியில் விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதனை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அனுப்புகின்றனர்.
இதுமட்டுமின்றி சில வடமாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் தென்மேற்கு பருவமழை சரியான படி பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. இதனால் சைனீஸ் காய்கறி மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.35க்கு விற்பனையாகி வந்த ஸ்பிரிங் ஆனியன் தற்போது ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.40 முதல் 45க்கு விற்பனையாகி வந்த செல்லரி ரூ.80 முதல் ரூ.85 வரையிலும், ரூ.80க்கு விற்பனையான லீக்ஸ் கிலோ ரூ.190 வரையும் விலை உயர்ந்துள்ளது. தண்ணீர் பற்றாகுைறயால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
இதனால், அறுவடை பணிகள் தாமதமடைந்துள்ளதால் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் இவற்றின் விலை மேலும் உயர கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“ சைனீஸ் காய்கறிகளை பொறுத்த வரை குறைந்த நாட்களில் விளைச்சலை தரும் பயிராக உள்ளன.
இவற்றிற்கு குறைந்த அளவிலான தண்ணீர் இருந்தாலே போதுமானது. தற்போது தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வரும் நிலையில் கொதுமுடி, கவரட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழையே இல்லை. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த தண்ணீரில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறிகளுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பயிரிட்டுள்ள இவற்றிற்கு தண்ணீர் இல்லாததால் அறுவடை தள்ளி போய் உள்ளது. தண்ணீர் இல்லாவிட்டால் வளர்ச்சியின்றி அவற்ைற அறுவடை கூட செய்ய முடியாது. வரும் நாட்களில் மழை வந்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும்” என்றனர்.
