×

திருச்செங்கோடு அருகே மாற்று இடம் கேட்டு ஏரிக்குள் இறங்கி மக்கள் போராட்டம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் குளத்துவளவு அருந்ததியர் குடியிருப்பில், 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுக்கு முன்பு குடியிருக்க பட்டா வழங்கப்பட்டுள்ளது. அருகிலேயே 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

இந்த ஏரியை ஆழப்படுத்தியதால், கடந்த சில ஆண்டுகளாகவே மழை பெய்யும் சமயங்களில் குடியிருப்புகள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், சாலைகள் சேதமடைந்து, வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், குழந்தைகள் பல்வேறு உடல் உபாதையால் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், சிலர் ஊரை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

மீதமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சுரேஷ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புக்குள் இரவு நேரங்களில் பாம்புகள் அதிகம் வருவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 2 நாட்களாக போராடி வரும் பொதுமக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வில்லை. இதையடுத்து, நேற்று அங்குள்ள ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு தாசில்தார் ராஜா மற்றும் எலச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களுக்கு மாற்றியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை ஏரி தண்ணீரில் இருந்து வெளியே வர மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Thiruchengode ,Arundhathiyar ,Kulathuvala, Ilupuli village ,Elachipalayam ,
× RELATED வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில்...