செய்துங்கநல்லூர், ஜூலை 24: கருங்குளம் வட்டாரத்தில் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண் உதவி இயக்குநர் ஏஞ்சலின் கிரேபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீவிர பயிர் சாகுபடி முறையால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணின் இயற்கைத் தன்மை மாறி மண்வளம் குறைந்து வருகிறது. மண்ணின் இயற்பியல் மற்றும் ரசாயனத் தன்மை மாறும்போது, எந்த வகையான உரங்களை பயன்படுத்தினாலும் அவை பயிர்களுக்கு முழுமையாக கிடைக்காத நிலை ஏற்படும்.
