மதுராந்தகம், ஜூலை 24: பெரும்பாக்கம் ஊராட்சி, தண்டலம் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய தண்டலம் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மதுராந்தகம் எல் எண்டத்தூர் சாலையில் நேற்று 50க்கும் மேற்பட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதியில் மட்டும்தான் நூறு நாள் வேலை வழங்கவில்லை, மற்ற பகுதிகளில் வேலை வழங்கப்படுகிறது என்று கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் அங்கிருந்து அனைவரும் கலந்து சென்றனர்.
