தூத்துக்குடி, ஜூலை 24: நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தூத்துக்குடியில் மூட்டா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை கலைத்திட வலியுறுத்தியும், விபிஎஸ்ஏ பில் 2025ஐ திரும்பப் பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மூட்டா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வஉசி கல்லூரி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூட்டா கிளைத் தலைவர் சுபா தலைமை வகித்தார். டிஏஎன்டிஎஸ்ஏசி கிளைச் செயலாளர் காட்வின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். கிளை பொருளாளர் கண்ணன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். கிளைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள், இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள், கல்லூரி மாணவ- மாணவியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
