நெல்லை, ஜூலை 24: நெல்லையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பேரணியாக வந்தனர். அப்போது போலீசார் மற்றும் ஊர்வலத்தில் வந்தவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் குதித்து உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23ம்தேதி அன்று நினைவு தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பில் இருந்து பேரணியாக அண்ணா சிலை வரை வந்து ஆற்றில் இறங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
