அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் சுருங்கும் நீர்நிலைகளின் கரைகள்

 

சேலம், ஜூலை 16: சேலத்தில் பல்வேறு இடங்களில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலை கரைகளின் பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவமழை நன்கு பெய்தது. ஆனால், நடப்பாண்டு இதுநாள் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதன் காரணமாக, தற்போது 30 சதவீத ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. அதே போல் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இரண்டு ஆண்டுக்கு பிறகு, நடப்பாண்டு மேட்டூர் அணையும் வேகமாக வறண்டு, நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் சென்று விட்டது. வழக்கமாக ஜூன் 12ம் தேதி, டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். நடப்பாண்டு அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம், தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.

இதனிடையே, சமீப காலமாக நீர்நிலைகள், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதன் காரணமாக, நீர்நிலைகளின் கரைகளின் பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. சிறிய மழைக்கே மழைநீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. மேலும், பல இடங்களில் நீர் வழித்தடங்கள் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பருவமழைக்கு முன்பே நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உதாரணமாக சேலம் ஏற்காட்டில் பெய்யும் மழைநீரானது, பல வழிகளில் பிரிந்து செல்கிறது. அதில் முக்கிய வழித்தடமாக திருமணித்தாறு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வரட்டாறு வழியாக மழைநீர் வருகிறது. இந்த வழித்தடம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகேயுள்ள கருங்காலி கிராமத்தில் தொடங்கி, ஏடிசி நகர் வரட்டாறு வழியாக டிவிஎஸ் பஸ் ஸ்டாப், சின்னேரி வயக்காடு வழியாக சென்று, மீண்டும் திருமணிமுத்தாற்றில் கலக்கிறது.

இந்த வழித்தடத்தில் டிவிஎஸ் பஸ் ஸ்டாப் அருகேயும், சின்னேரி வயக்காடு பகுதியிலும் செடி,கொடிகள் வளர்ந்து கரைகளின் அளவு சுருங்கி முட்புதராக காட்சியளிக்கிறது. மேலும், இந்த நீர்வழித்தடத்தில் சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. இந்த ஏரிக்கு நீர் வழித்தடங்களில் கரையின் அகலம் 20 முதல் 30 அடியாக இருந்தது. இவை நாளுக்கு நாள் சுருங்கி, ஒரு சில பகுதியில் 10 அடியாகவும், 12 அடியாகவும் குறுகி உள்ளது. இதே போல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளின் கரைகள், ஆக்கிரமிப்பால் தொடர்ந்து சுருங்கி வருகிறது. எனவே நீர்வழித்தடத்தில் உள்ள செடி,கொடிகளை அகற்ற வேண்டும். மேலும், கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முட்புதராக மாறியுள்ள நீர்நிலைகளின் கரைகளை தூர்வாரி, சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: